சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 16-02-2023
ஆக்கம் – 44
புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதிமண்ணின் வாசம் இன்னும் போகவில்லையே
பிரிந்துவந்த மண்ணின் சோகம் ஆறவில்லையே
ஆழ்மனதில் இன்று வரை உறக்கமில்லையே
தாய்மண்ணின் நேசம் என்றும் பிரிவதில்லையே

அன்னையவள் கரம்பிடித்து மெல்ல மெல்ல கால்பதித்து
பிஞ்சுவிரல் மண்தழுவும் அன்னைத்தமிழ் உயிர்த்துஎழும்
மண்குடிசை வாழ்க்கையிலும் ஆனந்தம் குடியிருக்கும்
முழுநிலவின் முற்றத்தில் ஏகாந்தம் நிறைந்திருக்கும்

வானுயர்ந்த கோபுரங்கள் விண்பார்க்கும் பனைமரங்கள்
வான்பாயும் குளங்கலெல்லாம் எங்கள் மண்ணின் வளமாகும்
வயல் எங்கும் நெற்கதிர்கள் தலைசாய்த்து வணங்கி நிற்கும்
பொன்விளையும் தாய்மண்ணே எங்களின் வரமாகும்

செங்குருதி பாய்ந்த மண்ணில் ஈரமின்னும் காயவில்லை
ஆறாக வடித்தகண்ணீர் கரைந்து போனதே வங்கக்கடலினிலே
பொங்கிவரும் அலை இன்னும் ஓயவில்லை ஓயவில்லை
நெஞ்சுக்குழி பாரம் இன்னும் தீரவில்லை தீர்வுமில்லை

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்

Nada Mohan
Author: Nada Mohan