பாசப்பகிர்வினிலே………!!
பாசப்பகிர்வினிலே……58
பாலதேவகஜன்
வலி
நினைவுப் பெருவலிகள்
நிறைந்த என் வாழ்வில்
நான் நிலைகுலைந்து போவது
உனை பிரிந்த பெருவலியே!
உருகி உருகி ஏங்குவதும்
கருகி கருகி வாடுவதும்
காலம் இட்ட கட்டளையோ!
கடவுள் கூட நித்திரையோ!
மருவி மருவி போகும் இன்பம்
மாறும் காலம் எப்போது
வீறுகொண்டு எழுந்திட மனமுமில்லை
வீழ்ந்தே கிடந்திட விருப்பமுமில்லை
கூட இருந்தவர்கள்
அவையங்கள் இழந்ததுவும்
கூடி மகிழ்ந்தவர்கள்
கல்லறையில் துயில்வதுவும்
கண்முன்னே காண்கின்ற
கோரத்தின் உச்சங்கள்
அத்தனையும் தாண்டிவர
என் நெஞ்சம் மறுக்கிறது
போர் அறம் தவறாத
பொறிமுறைக்குள் மனவலிமையோடும்
பெரும் பலத்தோடும் எங்கள்
தாய்மண்ணை காத்தே நின்றோம்.
வலுத்தவர்களோடு போரென்றால்
வரலாற்றை பதித்திருப்போம்
போரோடு நின்றவர்கள் வஞ்சகர்கள்
வஞ்சத்தை வென்றிட முடியவில்லை
உயிராய் நேசித்த உன்னதத்தவளை
விட்டுவர மனமின்றி விலகியே வந்தேன்
விரும்பாத தேசத்தில் வாழ்வே வெறுத்து
வலுவின்றி பெருவலியோடு நின்றேன்.
காலம் ஒர் நாள் மாறும்
எம் தாகம் அன்று தீரும்
என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்
எம் தாய்மண்ணை மீட்டு வாழ
தாய்மண்ணே! என் கண்ணே!
என் உடலும் உயிரும் உனக்கானது
உன் தரம்தாழ நான் விடமாட்டேன்
என் சிரம்தந்து உனை காப்பேன்.
