சிவா சிவதர்சன்

[ வாரம் 266 ]
“நிர்மூலம்”

அந்நியராதிக்கம் மறைந்து எழுபத்தாறாண்டுகள் பூர்த்தி
அடக்குமுறை, ஊழல் சுரண்டலால் நாடே நிர்மூலம்
மக்கள் தங்களைத்தாங்களே ஆளுதல் ஜனநாயகம்
பெரும்பான்மையினர் சிறுபான்மையை ஒடுக்குதல் சர்வாதிகாரம்

அகிம்சைவழியில் தமிழர் அன்று கோரியது அடிப்படை உரிமை
அடைந்ததோ உதிரப்பலி, சொந்த மண்ணிலே அகதி நிலமை
அறமறியா மூடரிடம் அகிம்சை பேணிப்பயனில்லை
ஆதலால் ஆயுத முனைக்குத்திரும்பியது போராட்ட எல்லை

பயங்கரவாதி முத்திரைகுத்தி அந்நியரிடம் ஆயுதப்பிச்சை
மிஞ்சிய ஆயுதங்கள், எஞ்சியஆளுதவியால் விஞ்சியது இறக்குமதி
இலங்கை சிங்களவருக்கு மட்டுமே, தோற்றால் கடலே தஞ்சம்
இனவாத துவேஷத்தால் அச்சம் கொண்டது சிங்கள நெஞ்சம்

நிர்மூலக்கொள்கை தெற்கில் எடுபடா மக்களோ கொஞ்சம்
சிறுவர்,முதியோர், பெண்களைக்கூட இரக்கமற்ற உயிர்பறிப்பு
மக்கள் கூடுமிடமெல்லாம் தொடர்ந்தது இன அழிப்பு
தனக்குக்கண்போனாலும் தமிழினம் முற்றாக அழிவதில் விருப்பு

துறைமுகம், விமானநிலையம், கேந்திரநிலைகள் ஏலத்தில் விற்பனை
இனவெறி முற்றிய ஆட்சியாளர்களுக்குப்பிடித்தது பித்தநிலை
சிங்கள ஜனதாக்களுக்கு இப்போது புரிகிறது கையறுநிலை
ஆட்சியாளர் விதைத்த விதை,நாடே இன்று நிர்மூலம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன் .

Nada Mohan
Author: Nada Mohan