உதிர்கின்ற இலைகளே……

ரஜனி அன்ரன்

உதிர்கின்ற இலைகளே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 17.10.2024

இயற்கையின் அழகான மாற்றம்
இலையுதிர் காலத்தின் தோற்றம்
காலநிலையும் மாற கடுங்குளிரும் வாட்ட
தருக்களின் வேர்களும் திறன் குன்ற
தண்ணீர் இழப்பைக் குறைத்திடவே
தருக்களும் இலைகளை உதிர்த்திடவே
தருவிற்கே உரமாகும் அதிசயம்
உதிர்கின்ற இலைகளே அச்சாரம் !

மண்ணில் உதிர்கின்ற இலைகளே
மண்ணிற்கு உரமாகப் போவதற்காய்
உருமாறி மஞ்சள் சிவப்பு பழுப்பு வண்ணமாகி
மண்ணில் போடும் வண்ணக் கோலமோ இது
உங்கள் உதிர்வு காலம்மாறும் செய்தியை
வாழ்வியல் மாற்றங்களை
வண்ணமாய் சித்தரிக்கிறதே !

அழகாய் உதிரும் இலைகளே
உம் வீழ்ச்சி முடிவல்ல
புதிதாய் மழையின் பொழிவால்
வளம் சேர்க்கும் துளியாய்
மீண்டும் நிலம் திரும்பும் வரவாய்
புதிய தருக்கள் முளைவிட
புதுவாழ்வை உருவாக்கும் தருக்களே
மீண்டும் வசந்தகாலத்தில் செழித்திடுவீரே !

Nada Mohan
Author: Nada Mohan