ஜெயம் தங்கராஜா

தொழிலாளி

அயராது அல்லும் பகலுமாய் உழைத்து
வியர்வை மழையில் அன்றாடங் குளித்து
தன்தோளிலே உலகைச் சுமப்பவன் தொழிலாளி
மண்தேசத்தை கட்டி ஆளும் முதலாளி

மண்ணைத் தோண்டி பொன்னை எடுத்தான்
விண்ணை முட்டும்  கட்டிடம் தொடுத்தான்
உண்டாக்கி அன்னத்தை பஞ்சத்தை ஒழித்தான்
உன்னையும் என்னையும் உயர்த்திட இளைத்தான்

இல்லாமை என்பதும் அவனாலே  இங்கில்லை
எல்லாமும் அவனாலே விண்ணிறைவன் தன்பிள்ளை
பாடுபட்டு உழைப்பைக் கொடுத்திடும் கரங்கள்
நாடுகளிற்கெலாம் தொழிலாளிகள் கிடைத்திட்ட வரங்கள்

செய்யும் தொழிலை தெய்வமாக்கிடும் பாட்டாளி
மெய்யிலுமவனே வாழ்க்கைக்கு உதவும் கூட்டாளி
மேதினத்தில் அவர் பெருமைகளைக் கூறுவார்
மேதினியில் அவனின்றி யார் பசியாறுவார்

ஜெயம்
28-05-2022

Nada Mohan
Author: Nada Mohan