நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

ஜெயம் தங்கராஜா

கவி 762

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைத்ததெல்லாம் நடக்கவில்லை நடப்பதெல்லாம் நினைத்ததில்லை
வேண்டிய நேரத்திலே வேண்டியதெல்லாம் கிடைக்காது
தாண்டியே போய்விடும் நினைத்தபடி நடக்காது

இதுவரை காலமும் என்னென்னவோ நினைத்தோம்
எதுவரை ஆனாலும் பெறவேண்டியே நினைப்போம்
எண்ணங்களின் ஊட்டலிலே வாழ்க்கையின் ஆட்டம்
என்றல்லவோ நினைத்தபடி இன்றுவரை ஓட்டம்

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளையும் நினைப்பாரோ
வினை தீர்ப்பவரென அனுதினமுமவரை துதிப்பாரோ
நம்மையும் மீறி ஏதோவொன்று இருக்கிறது
தம்மால் முடிந்ததை நேரம்பார்த்து தருகிறது

இந்தப் புரிதல் இருந்தாலே போதும்
சிந்தையின் தன்மையும் தானாக மாறும்
இடர்களின் நடுவிலும் பயணங்கள் அவசியம்
கடந்ததும் தெரிந்திடும் வாழ்க்கையின் இரகசியம்

பிரச்சினைகள் வந்துவிட்டால் என்கின்ற அச்சம்
விரட்டிவிட தென்பிருந்தால் அமைதியங்கு மிஞ்சும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருந்தால் இங்கு
இடம்பெறுவது இழப்பேயாயினும்
வருமோ துன்பமங்கு

படைத்தவருக்குத் தெரியாதோ எவருக்கு எதுவெதுவென்று
கிடைத்துவிடச் செய்யாரோ அவருக்கு அதுவதுவென்று
பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகளுடனான மானிடா
நிலையில்லா வாழ்விதெனும் தத்துவத்தை பேனடா.

ஜெயம்
20-02-2025

Nada Mohan
Author: Nada Mohan