பாலதேவகஜன்

மாசி

உள்ளம் நினைத்தவளை
உருகி கிடக்கையிலே
உணர்வில் ஏற்றிவைத்து
உயிராக நேசித்தேன்.

உண்மை உணர்ந்தவளும்
உடன்பட்டு கொண்டிடவே
உச்சி குளிர்ந்துநின்று
உலகை மறந்துவிட்டேன்.

உருவப் பிடிப்போடு என்
உள்ளம் நுழைந்தவளின்
உள்ளத்து மேன்மை கண்டு
உறைந்தே போய்விட்டேன்.

உச்சமாய் என் வாழ்வு
உன் வருகையோடு ஆனது
உள்ளத்தில் இன்பம்மட்டும்
உட்கார்ந்து கொண்டது.

மாசி பிறந்தால் தான்
காதலர் தினம் வருமாம்
என்ற காத்திருப்போடு மட்டும்
என்றைக்கும் நான் இருந்ததில்லை

நீ என்னுள்ளே வந்து
எனக்காகவேயான
நாளிலிருந்தே எனக்கு
தினம் தினம் காதலர்தினமே!

காதலோடு நாங்கள்
கலந்திருந்த காலம்
கடுமையான வலிகள்
கண்டதினால் சோகம்.

தூய்மையோடு நானே!
தொடர்வதென்ற உண்மை
துலங்கிய கணமே
துவண்டு போனேன் நானே!

மேன்மையாகி நின்றவள்
மோகவலையில் வீழ்ந்தாள்
மெல்ல மெல்ல தோற்று என்னை
மெய்சிலிர்க வைத்தது.

போதுமடா சாமி என்ற
புலம்பலோடு விட்டது
விரும்பியவளை விட்டுவிட்டு
விலகமனம் மறுத்தது.

ஒரு தலை நேசத்தோடு
என் வாழ்வும் நகருது
உறுத்தலேதும் இல்லாமல்
அவளின் உலாவல் தொடருது.

என்னை வஞ்சம் தீர்த்தது
காலமோ? காதலோ? நானறியேன்
என் நெஞ்சம் நிறைந்தவளை
என்றும் நான் சுமப்பேன் நினைவாக.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading