மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 186
23/08/2022 செவ்வாய்
விடுமுறை
—————
ஓடி ஓடி நித்தம் வேலையெனெ
ஓயாது உழைத்துச் சோர்ந்து
வாடி நிற்கும் மனமதை வருடி
வைத்திடத் தேவை விடுமுறையே!

நிதமாய் காணும் மனைகளின் வரிசைகள்
நிழலே இல்லா பெரும்தெருக் கரைகள்
விதமாய் தோன்றும் வன்மிகு செயல்கள்
விடுத்துக் கொண்டிட விடுமுறை வேண்டும்!

ஊருக்குச் செல்வது ஒரு தனி சுகம்!
உறவுகள் தரிசனம்-அது தரும் இதம்!
பாரினைச் சுற்றி நாம் வரும் வலம்
பட்ட காயங்கள் ஆற்றிட வழிவிடும்!

நீலநிற வானமும் நிறைமுக மதியும்
நிம்மதியை மனதில் கொண்டுவரும்!
பாலைவன நெஞ்சும் பசுமை பெறும்!
பக்குவமாய் இதயத்தை வருடிவிடும்!

அலைகடல் ஓரத்தில் அமர்ந்திருக்க
அலைபாயும் நெஞ்சில் அமைதிவரும்!
விளைநிலம் தனை நீ வலம்வரவே
விலையில்லா மனவளம் வந்துசேரும்!

உடலும் உள்ளமும் நலம் வேண்டில்
உனக்கு வேண்டும் விடுமுறையே!
கடலும் மலையும் கண்ட திருப்தி
களைத்த மனதில் களிப்பினைத் தருமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading