கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி !
விரட்டும் விதியின் விரைவு ஓட்டம்
விடாது தொடரும் பம்பர ஆட்டம்
கைக்குள் அடக்காக் கணக்கற்ற தேவை
கண்டபடி விரியும் எண்ணற்ற ஆசை

உவப்புத். தேடி உண்மைகள் புதைத்து
உருவம் மாற்றி உள்ளமும் ஆற்றி
உறுத்தும் வாழ்வின் உணர்வுகள் மரத்து
உலவும் மனிதர் உலகில் கோடி

உடையும் நடையும் களையும் இழந்து
உருக்குலைந்து உருட்டிடும் ஆயுள்
உலகுக்கு மறைக்க உதவிடும் தருணம்
முகமூடி என்னும் முகக்கட்டுக் கவசம்

பலவேடம் இட்டு பல்லிளித்து நின்று
பாசாங்கு பசப்பில் சுயந்தனை களைந்து
பரிமாணங் கொண்ட கனவானாய் மின்ன
பலநேரம் துணையாகும் முகமூடி வேஷம்

முகமூடி களைந்து முழுதாய் ஓர்நாள்
உளமார வாழ மனதார ஏக்கம்
உணர்வுகள் மரத்து ஜடமாகு முன்னே
முகமூடி இல்லா ஓர் நாள் வருமா ?

கீத்தா பரமானந்தன்
17-02-25

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading