சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு290
விருப்ப தலைப்பு
“மலரும் பூ”

மலர்களின் பேச்சு
மயக்குது மனதை
எத்தனை வர்ணங்கள்
ஏதேதோ பாஷைகள்

கண்களை மூடிக்
கவிதையைத் தேடி
மலர்களைப் பார்த்தேன்
மங்கையின் வதனம்

நிஜங்களை மறந்தே
நிழல்களில் மறைந்தே
செடிகளின் இதழ்களில்
செந்தமிழ் மலர்களே

பூங்கொடி என்றவர்
போற்றினர் பெண்களை
பூக்களின் மென்மையை
பூவையர் கொண்டதால்

கம்பனின் கனவினில்
கண்ணதாசன் கற்பனையில்
வாலியின் இளமையில்
வலம்வரும் மலர்களே

வலம் வரும் பூவினம்
வீசிடும் நறுமணம்
வார்த்தைகள் இல்லையே
வரித்திட மலர்களை

அரும்பிடும் போதிலும்
அழகாய்க் குமிந்திடும்
விரிந்திடும் வேளையில்
விளைந்திடும் ஒலியலை

பாரதி கண்ட கவிநயம்
பாரினில் மலர்ந்திடும்
மலர்களின் பேச்சென்று
மகிழ்ச்சியில் மனதின்று

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading