அது ஒரு கனாக்காலம்..!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை-2188!!

„அது ஒரு கனாக்காலம்”

குச்சொழுங்கை குடிசை வீடு
குட்டிக் குட்டிக் கோயில்கள்
திண்ணையிலே பாட்டி அப்பு
தீராத மண் விளையாட்டு..

ஊர் கூடிப் பொங்கல்கள்
ஊர்க் கோயில் திருவிழா
பள்ளிக் கூட பம்பல்கள்
பாட இடைவேளை வீடு வருதல்..

ஆடு மாடு கோழி நாய் பூனை
அத்தனையும் வளவுக்குள்
வேலியிலே பொட்டு வைத்து
வெடுக்கென்று புகுந்தோட்டம்..

அடுத்த வீடு சமையல் -அதில்
நமக்கும் ஒரு கை பிடியல்
வீதியிலே மிதி வண்டி-அதை
துரத்தி ஓடும் தெரு நாய்கள்..

கோயில் மணியே அலாரம்
காகங் கரைதல் தந்தி ஆகும்
பாட்டி சொல்லும் ஊர்க்கதை
பணியார வாசம் நாசி நுழை..

அது ஒரு கனாக்காலம்
இங்கில்லை அந்த கோலம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading