சக்தி சக்திதாசன்

சிற்சில பொழுதுகள் எனை
சிறை கொள்ளும் வேளைகள்
சிறப்புறு இயற்கையின் வனப்பு
சிந்தையை மயக்கிடும் மலைப்பு

விளைந்திடும் எண்ணங்கள் யாவும்
விதைத்திடும் நிலைகொள் விதைகள்
வியப்போடு நோக்கிடும் கணங்கள்
விந்தையாய் விரித்திடும் சிறகுகள்

துடித்தொரு சிசுவாய் புவியில்
துளிர்த்திடும் நாள் முதல் வாழ்வில்
துலங்கிடும் வகைகளை புரிந்திடா
துல்லிய உணர்வுகள் பற்பல அறிவேன்

நடித்தொரு பாத்திரம் எமக்காய்
நாடகம் எழுதிய இயக்குனன் யாரோ?
நாளும் , பொழுதும் நடப்பவை அனைத்தும்
நானறிந்திட்டேனானல் அது அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan