ஒளவை

நிழல் பேசும் காதல்
***********************
உருவம் இரண்டில்
எழிலோ இல்லை
கருமை நிறைந்த
காட்சித் தோற்றம்
பருவம் தெரியா
பண்பும் அறியா
கருவில் மட்டும்
காதல் கோலம்

நீயும் நானும்
நிழலாய்த் தொடர்ந்து
ஒயும் காலம்
என்றும் இல்லை
பாயும் நீரில்
பார்த்த நிலாபோல்
சாயும் உருவமும்
சங்கதி உரைக்கும்

கைகள் கோர்க்கும்
காட்சி ஒன்றே
பகலில் மட்டும்
பார்க்கத் தெரியும்
மையல் கொண்டு
மறைவாய்ப் புரியும்
சைகை எல்லாம்
சான்றாய் நிலைக்கும்

காலை மாலை
கணங்கள் எல்லாம்
வேலை தூக்கம்
வேறும் மறந்து
உழலும் மனது
உன்னில் என்னில்
நிழலாய்ப் பேசும்
நிசமாய்க் காதல்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan