பாலதேவகஜன்

சூர வதை

கந்தா! கடம்பா!
வேல் முருகா!
கதிர்காம நாதா!
வேல் அழகா!

சூர சங்காரா!
வேல் முருகா!
சுப்ர மணியனே!
வேல் அழகா!

தேவரை காத்திட
அவதரித்த
மாயோன் மருகா!
வேல் அழகா!

ஆற்றிட முடியா
துயரங்களை
அறவே அழித்தவா
வேல் அழகா!

சூர வதை
சொல்லும் கதை
உன் வீரமதை
காட்டுதையா!

பேரிடரை போக்குதற்கு
போர்குணமே!
பொருத்தமென்ற
தத்துவத்தை காட்டியவா!

உனைப்போல ஒருவன்
எங்களுக்காய் பிறந்தான்
எம் உணர்வெல்லாம் அவனே!
உன் சாயலானான்.

அசுரர் குல ஆணவத்தை
அடக்கி நின்ற ஆறுமுகா!
ஆறுபடை வீடமைத்து
அடியவரை காத்தவா!

மாயை பெற்ற மைந்தனுக்கு
மரண பயம் காட்டியவா!
மாய வித்தை அத்தனையும்
வேல் கொண்டு அழித்வா!

ஈழத்தாய் பிள்ளைகளை
ஏனையா நீ காக்கவில்லை
கோவில்கள் கட்டி
கொண்ட பக்தி போதாதோ?

காவலனாய் நீயென்று
காலம் காலமாய்
காத்திருந்த எங்களின்
கருவறுத்து விட்டாயே

தேவர்கள் பட்ட குறைக்கு
மேலாக நாங்கள் பட்டோமே
தீராத எங்கள் வலிக்கு
தீர்வொன்று தர மறுத்தாயே

சூரனை நீ வதம் செய்தாயா?
சூரன் உந்தன் கருணையை
வதம் செய்தானா?
என்ற சந்தேகம் எங்களுக்கு.

தேவர் குறை தீர்த்துபோல்
எங்கள் குறை தீருமையா
வாழுங்காலம் அத்தனையும்
வலியின்றி நாம் வாழ்ந்திடவே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading