கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ!
அன்று அனுமன் இட்டதீ
ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ
கானலாய் ஈழத்தைக்
கங்குலில் புதைக்குதே!
ஆணவம் அகந்தையின்
அடங்காப் பசியினால்
தேனெனும் மனிதத்தை
தினமெலாம் கருக்குது!

பூண்டோடு தமிழரைப்
புதைத்திடும் நோக்குடன்
மூட்டிய தீயதாய்
மூசியே எரியுது!
முடிவுரை இன்றியே
முத்திரை பதிக்குது
நாட்டிய இனவெறி
நங்கூரம் பாச்சுது!

மனிதத்தைத் தொலைத்திட்ட
மாக்களின் கரத்திடை
புனிதமாம் ஈழம்
பொசுங்கித் துடிக்குது!
பொறுப்புடை உலகமும்
போக்கற்று நிற்குது!

கீத்தா பரமானந்தன்29-05-23

Nada Mohan
Author: Nada Mohan