புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-18
23-11-2023
மாவீரரே
மாவீர மணிகளே!
மாதம் கார்த்திகை மலர்ந்தாலே நும்
ஈகை நினைவில்
கண்கள்
கருமேகமாய் தமிழர்
மனம் கலங்க
கண்ணீரும் பொழியுதே
மழையாய்!
மதங் கொண்ட கயவரால்
மாண்டனர் எம் மக்கள்
சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
தொலைந்து போன கனவுகள்
குற்றுயிராய்க் கிடந்த தாயின்
மார்பில் பால் தேடும் மழலைகள்
கற்பிழந்த மங்கையர்
அங்கமிழந்த முதியவர்கள்
உன்னைப் பிரிந்த பெற்றோரும்
உடன் பிறப்பும்
நடைபிணமாய்
சித்தங் கலங்கி….!
கதறித் துடித்த எம் இனம்
கண்டு நீயும் கொண்டாய்
களமும் சென்றீர்
துள்ளி விளையாடும்
பள்ளிப் பருவத்தில்
கையில் துவக்கேந்தி
செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
அன்று நீவிர் பட்டதை
எந்த நாடும் கேட்கவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை!
மண்ணிற்காய் தன்னுயிரை
மாய்த்த மாவீரரே
எம் இளம் சந்ததி கண்மூடி
கணனியில் உறங்காமல்
தாய் மண் பற்றுடனும் எம்
இன மொழியுடனும் வாழ்வரே!
எம் இன விடுதலைக்காய்
இன்உயிர் ஈந்த நும் கனவு
நனவாகும் நாள்
செங்காந்தளின் தீ சுவாலயாய்
நும் தியாகம்
சுடர் விடும்
விழுதாய் போன உங்களுக்காய்
காந்தள் மலர் கொண்டு
தொழுது நானும் மண்டியிடுகின்றேன்!
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
