என் பிறந்தநாள்
வரமானதோ வயோதிபம்
நாதன் கந்தையா
=மொழி=
என்மொழி தமிழ் மொழி சிறந்தது என்பேன்.
அதைவிட சிறந்தது தாய்மொழி கண்டேன்
மேவிய குழந்தையின் மழலையும் பண்ணே
மிதந்து என் தேவாரம் தவழ்ந் துலகாளும்
காற்றிடை படர்ந்தது நாட்டவர் பாடல்
கல்லிடை எழுதிய நல்மொழி கண்டோம்
ஆங்கிலம் சிறப்பு அரபியும் சிறப்பு
மாங்குயில் கூவும் மதுரமும் சிறப்பு.
தாங்கியோர் கிரந்தம் தமிழொடு கலந்த
மந்திர மொழியது சம்சுகிரதமும் சிறப்பு.
மூங்கிலின் குழல் தரும் மேவிய நாதம்
மின்னலின் பின்னொரு முழங்கிடும் கீதம்.
மூத்தது தமிழென சொல்லுவோர் உண்டு
மேவிய கிரேக்கமும் சான்றுடன் உண்டு.
வாய்மொழி சிறந்த புலவனுமுண்டு
வண்ண விழிமொழி சிறப்பதுமுண்டு
வார்த்தைகள் குறைந்த வரிகளுமுண்டு
வாடையும் கீதமாய் இசைப்பது முண்டு.
காற்றுடன் உரசிய கீற்றிசை செம்மொழி
கடலெழுந் தலை தரும் மேவிய நல்மொழி
போற்றுவார் பெரிதென அவரவர் தாய்மொழி
மெல்லினம் கூடிய சீனமும் நல்மொழி
போற்றுவோம் அவரவர் தாய்மொழி சிறந்தது
பூமியில் உள்ளது எல்லாம் நல்மொழி.
-நாதன் கந்தையா-
