-எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 245
“காதல்”
அரும்பு மீசை பருவம்
ஆசை உதிரும் இதயம்
விரும்பி தேடி அலையும்
விடலை பருவம் உதயம்.

மழையில் மாலை வேளை
வன்னி காட்டு சாலை
பொழுது வாடும் சந்தி
போக வண்டி இன்றி..

உழவு வண்டி ஒன்று
உதவ வந்து நின்று
அழகு மங்கை ஒன்று
அதிலே ஏறி கொண்டு

இன்னார் தங்கை என்றாள்
என்னை தெரியும் என்றாள்
தன்னை வீட்டு முடக்கு
தாண்ட உதவும் என்றான்.

கன்னி அவளில் மனதும்
கனவில் கொஞ்சி குலவும்
எண்ணி அவளின் அழகை
இதயம் ஒயிலில் ஆடும்.

பாதை அதிலே போகும்
பயண வேளை பலதும்
காணும் வேளை யாவும்
காதல் முறுவல் போடும்.

கண்ணும் கண்ணும் கூடும்
களிப்பில் உள்ளம் துள்ளும்
உண்ணும் அழகை கண்னும்
உடலும் வானில் ஊரும்.

என்னில் பகைமை கூடி
இருந்த ஒருவன் கூறி
தன்னில் தவறை மறைய
தப்பை என்மேல் உரைக்க..

காதல் ஒடிந்து போன
காயம் காய்ந்து போக
வாழ்வை புரிந்து வாழ
வயதால் கற்று தேற..

பிரமன் படைத்து கொடுத்து
பிறவி எடுத்த உயிர்ப் பூ
எனக்கு காதல் கிடைப்பு
இணைவில் இல்லை எதிர்ப்பு

காலம் நாற்ப தாயும்
காதல் இன்னும் ஈரம்
பேரன் பிறக்கும் போதும்
பேரன்போடு நீளும்.

-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan