எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 279
“விடியுமா தேசம்?”

ஆண்ட தமிழர் தம்
அடையாளம் தொடர
ஆளும் வேட்கை
அணையா தீயாய்

மாண்டவர் கோடி
மண் இதில் போரில்
மறப்போர் அறப்போர்
மறுபடி மறிபடி

எங்கள் பரம்பரை
இருப்பு இழப்பு
இருந்த பரப்புமோ
இழப்பு இழப்பு

மதமும் மொழியும்
மதம் கொண்ட மனமும்
மாறாத பேரினம்
மலருமா தேசம்?

நீலம் பச்சையாய்
நீண்டது ஆட்சி
நிலவிய வறுமையால்
நிமிர்ந்தது சிவப்பு.

வடக்கை கிழக்கை
வழக்காடிப் பிரித்தவர்
வருத்திய சுனாமிக்குள்
வஞ்சகம் விதைத்தவர்

தலைகளின் தொகையே
தலைமையை தெரியும்
தமிழர் தேசத்துக்கு
விடியலா பிறக்கும்?
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan