கீத்தா பரமானந்தன்

அழியாத கோலம்!

அன்னை மடியில் அவதரித்த போதிலே
ஆடிஅடங்கும்வரை அசைக்க முடியதாபடி
ஆண்டவன் தலையில் ஆழமாய் போட்டானே
அழியாத கோலமொன்றை தெரியாத கோலமாய் !

சோலைக் குயிலெனச் சுற்றிப் பறந்து
சொர்க்கத்தின் நிழலில் சுகந்தம் கண்டு
வாலைக் குமரியாய் வாஞ்சைத் துள்ளலில்
வனப்பாக வரைந்தது வண்ணக் கோலங்கள்

நித்தியத்தின் வாசலில் நிமிடத்தில் யுத்தம்
சத்தமின்றிப் போட்டது சடுதியிற் கோலம்
சுற்றியே நின்ற சுந்தரங்கள் விட்டு
ஒற்றையாய் வந்தது ஓலமிடுங் கோலமாய்!

வசதியிற் புரண்டாலும் வனப்பில் உருண்டாலும்
வாட்டமுடன் பெற்றவர்கள் வழியனுப்பி நின்றநிலை
எப்போதும் நெஞ்சினிலே மக்காமல் மழுங்காமல்
நீக்கமற நிறைந்திருக்கும் அழியாத கோலமாய்!

கீத்தா பரமானந்தன்
04-11-24

Nada Mohan
Author: Nada Mohan