விடுமுறைக்காலம்
இதயம்-61
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“கவிதை”
திங்களோடு ஒரு கவிதை
தீந்தமிழ்ச் சொல்லெடுத்து
தித்திக்கும் நினைவுகளில்
தீண்டுமொரு இன்பமின்று
தீட்டுகின்ற கவியனைத்தும்
திகட்டுமொரு சுவையூட்டும்
ஏட்டிலொரு கவியூற
பாட்டிலொரு கருத்தூற
சொட்டுகின்ற தேன்துளிகள்
மீட்டுகின்ற சொற்சுவைகள்
கட்டுகின்ற கவிதைகளில்
காட்டுகின்ற பொருட்பொதிகள்
நெஞ்சிலூறும் நினைவுகள்
கொஞ்சுமிந்தக் காலையிலே
தஞ்சமெந்தன் தமிழெனவே
பஞ்செனவே மிதந்திருக்கும்
கெஞ்சுமெந்தன் விரல்களுக்கு
தஞ்சமிந்தக் கவிதைதானே !
விந்தையிந்த உலகென்பேன்
வந்ததெல்லாம் வரவென்பேன்
முந்துகின்ற அனுபவங்கள்
சிந்தையிலே பதிந்தவைகள்
சொந்தமென்னும் சக்கரத்தில்
பந்தமெல்லாம் விசையாகும்
தேடியோடும் தேவைகள்
நாடியெம்மை அடைவதில்லை
வாடியங்கு நின்றிருந்தால்
ஓடித்துன்பம் மறைவதில்லை
வாடிக்கையாய் திடமிருந்தால்
சூடிக்கொள்வோம் வெற்றிமலர்
அன்னைத்தமிழ்க் கடலினிலே
என்னைக்கொஞ்சம் மிதககவிட்டு
தன்னைக்காட்டும் தனிமையில்
முன்னைக்காட்டும் கண்ணாடி
விண்ணிலேகும் உணர்வோடு
மண்ணிலிந்தப் பயணமென்பேன்
நேற்றுப்பெய்த அனுபவத்தில்
இன்றுதுளிர்த்த ஞானமென்பேன்
நாளையிந்த வாழ்கையெல்லாம்
நானிலத்தில் அரங்கேற்றம்
வேளையொன்று வாய்த்திட்டால்
சோலைதானே பாதையெல்லாம்
எந்தையின் வாழ்வினிலே
விந்தொன்று விரைந்தங்கு
அந்தரத்தில் கருவறையில்
முந்திவிட்ட காரணத்தால்
சந்தையிந்த சமுத்திரத்தில்
நீந்துகின்ற விந்தையென்பேன்
அமைதி வேண்டுமென்றால்
ஆசைவழி நீந்திடாமல்
அடைவதெல்லாம் நமக்காக
அளந்ததென்று ஏற்றுக்கொண்டு
அனுதினமும் நேர்வழியில்
ஆனந்தமாய் பயணிப்போம்
சக்தி சக்திதாசன்
