சாரளத்தின் ஒளியினிலே

ஜெயம் தங்கராஜா

கவி 741

சாரளத்தின் ஒளியினிலே

மூடியே கிடக்கும் யன்னல்கள்
மூடிய இருள் கலைந்தும் விலக்கப்படா திரைகள்
மெத்தைக்குள்ளே புதைந்துகொள்ளும் தூக்கவிரும்பிகள்
இருட்டைக்கடந்தும் முரட்டு உறக்கம்

வெளிச்சத்தில் உருகிடும் பனியா இவர்கள்
ஒளியை பார்த்தால் குருடாகும் உயிரினமாக இவர்கள்
இல்லை சோம்பலால் சிறைப்படுத்தப்பட்டவர்கள்
வெளிச்சத்தின் விரோதிகள்
இரவின் நண்பர்கள்

மனிதா மூடிய திரையை இழு ஒளி வரட்டும்
ஒளியின் வருகைக்கு தடை விதிப்பதா
புற ஒளியூடாகவே அக ஒளி மூட்டப்படுகின்றது
எப்படி சூரிய வெளிச்சத்தை வாங்கி நிலா மிளிர்கின்றதோ அதைப்போல்

சாரளத்தினூடே வருகின்ற சூரிய ஒளியை தரிசித்துப்பார்
அன்றைய நாளுள் மகிழ்ச்சி கைகோர்க்கும்
உற்சாகம் மனமேடையில் கூத்தாடும்
தேகம் வேகம்பெற்று
ஐல்லிக்காளையாக துள்ளிக்குதிக்கும்

எனவே சாரளத்தை திற ஒளியை நுழையவிடு
இப்போ பிராணவாயு சுமந்த காற்று உட்புகும்
எட்டி வெளியே சுற்றிப்பார் விழிகள் புன்னகைக்கும்
அப்படியே அண்ணாந்துபார் அந்த நீலவானம் மனதை சுண்டியிழுக்கும்
நுழைந்தவொளி மனச்சிக்கல்களை சிக்கெடுத்து
நிம்மதியை பரிசாகத் தந்துவிட்டே செல்லும்

ஜெயம்
19-09-2024

Nada Mohan
Author: Nada Mohan