சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 171

தீயில் எரியும் எம் தீவு

தீயில் எரிகின்றது நாகதீபம்
சூட்சிகளால் அரசாட்சி செய்தவர்களுக்கு
தீக்குச்சிகளால் தீர்ப்பு எழுதப்படுகின்றது
கொள்ளையடித்த பணத்தில் கட்டிய வீடுகள்
கொழுந்துவிட்டு எரிகின்றது

தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
பட்டினத்தார் சொல்லிவைத்தார் அன்று
பட்டினம் கொழும்பு பற்றிஎரிகின்றது இன்று

மறக்க முடியுமா கடந்த காலத்தை
கொழும்பில் அரங்கேறிய கொடூரத்தை
ஆடியிலே ஆடினார்கள் பேயாட்டம்
ஆதிக்க வெறியர்கள்
ஆடித்தீயை மூட்டினார்கள்
ஆண்ட பரம்பரையின் அடிவயிற்றில்

ஆடித் தீயிற்கு இரையாகிப்போனோம்
சதியால் வீழ்ந்தோம் விதியெனக் கிடந்தோம்
வீதிகள் எங்கும் நடைப் பிணமானோம்
காப்பாற்ற யாருமின்றி அனாதைகளானோம்
கண் கெட்ட உலகமும் கைவிரித்த கேவலம்

வினை விதைத்தவன் வினை அறுக்கும் காலம்
விதியது வலியது வினையது துரத்துது
கொத்துக் கொத்தாய் எம் இனமக்களை
கொத்துக் குண்டுகளால்
கொன்று குவித்த பாவத்தின் சாபமது

இராவணன் ஆண்ட மண்ணிற்க்கு சாப விமோசனம் கிடைக்கட்டும்
மரகதத் தீவில் மனிதம் புனிதம் பெறட்டும்
இனங்களின் மனங்களில் பேதங்கள் மறையட்டும்
இனிவரும் காலங்கள் எமக்காக விடியட்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
12-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading