ஜெயம் தங்கராஜா

கவி 714

உலகாளுவது இது

அன்பு செய்துபார்
நற்குணங்கள் செயல்களுள் ஒட்டிக்கொள்ளும்
அகந்தை அழிக்கப்படும் ஆணவம் நொறுக்கப்படும்
பொறாமை பொசுங்கிவிடும் கோபம் தீர்ந்துவிடும்

ஒருவனை மனிதனாக்குவது இறைவனாக்குவதுங்கூட
மனம் அமைதியடையும் சிந்தனை தெளிவு பெறும்
பழக்கத்தில் கள்ளம் நீங்கி உணர்வுக்குள் உண்மை ஓங்கும்
அற்ப குணங்களை அகற்றிய அற்புத மனமொன்று உருவாகும்
தீயவைகள் மரித்துக்கொள்ள தூயவைகள் உயிர்த்துக்கொள்ளும்

அன்பைப் புரிந்துபார் அது உறவை வளர்த்துக்கொள்ளும்
உணர்வுகளில் உண்மை ஊறி நேயம் வெளிப்பட்டுக்கொள்ளும்
இதை இழந்தால் நரகத்தில் நுழைவு ஏற்றால் சொர்க்கத்தின் அழைப்பு
கெடுக்காது, கொடுப்பதென்பதை உணர்த்தும் உன்னதமான உணர்விது

ஒற்றுமையை உருவாக்கக்கூடிய சக்தி இது
இதை கடைப்பிடிப்பவன் மனிதநேயனாகிவிடுவான்
அளவில்லாமல் அள்ளிக்கொடுப்பவன் புனிதனாகிவிடுவான்
இரக்கத்தையும் கருணையையும் உயிர்கள் நடுவே கொண்டுவருவது இது

அன்பினால் சாதிக்கமுடியாத ஒன்று உலகிலில்லை
அன்பு கொண்டவர்க்காய் தம்முயிரை கொடுத்தவரும் உண்டு
குறுகிய காலங்கொண்ட வாழ்க்கையில் அன்பை அறியாமலிருப்பது தவறு
அன்பிற்கு கட்டுப்பட்டு வாழ்வது மட்டுமே ஆறறிவின் சிறப்பு

ஜெயம்
07-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading