மனோகரி ஜெகதீஸ்வரன்

பெண்ணே

பெண்ணே நீயொரு வரம்
என்னே உலகுசெய்த தவம்

சிவனும் தந்தான் பாதி
கணித்தே செய்தான் நீதி

பெண்ணே உந்தன்
பெண்மையே பேரழகு
மண்ணுக்குக் காட்டினான்
பாரதியும் நேரழகு

தாய்மை நீதாங்கின் தனியழகு
தவசி வாழ்வே உனதுறவு

செலவைக் சுருக்கி
வரவைக் கூட்டிச்
செய்வாய் சேவகம்
குலத்தைக் காக்க
குடும்பம் செழிக்க
எய்வாய் சுகத்தை

வெற்றியின் முன்னும்
பின்னும் மூச்சென
நிற்பவள் நீயே
சுற்றி நின்றுனைப்
பற்றி அணைத்துக்
காப்பவர் சிலரே

இச்சைக் கருவி
என்றெண்ணிச் செய்வர்
பாதகம்
கொச்சைக் குண்டுகளாலும் துளைப்பர் பாதகர்

இடிதாங்கி ரணமேந்தி
வடுவாங்கி வதைபடும்
பெண்ணே

நிலத்தில் உனக்கு உண்டோ நிம்மதி
அயரா உழைப்புக்கும் உண்டோ பெறுமதி

ஆக்கினை கண்டே கேட்கின்றேன் பெண்ணே
சாக்குப் போக்கைத் தூக்கிப் போட்டுப் போராடு
சங்கடங்கள் தொலையும்
வேரோடு
நீயும் வாழ்வாய் உணர்வோடு
உலகும் வாழும் உயிரோடு

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan