முகவரிக்கு மூலமே நீயின்றி நகராது நாளுமே

ஜெயம் தங்கராஜா

கவி 736

முகவரிக்கு மூலமே நீயின்றி நகராது நாளுமே

அணுவணுவாய் இரசித்தேன்
உள்ளமதில் குடிவைத்தேன்
ஓயாமல் காதலித்தேன்
எண்ணத்தில் பதித்தேன்
கருத்தினில் புதைத்தேன்
அனுதினம் நினைத்தேன்
உயர்வெனவே மொழிந்தேன்

அள்ளியள்ளி புசித்தேன்
பசியாறி மகிழ்ந்தேன்
அமுதென்று மொழித்தேன்
வரமென அறிந்தேன்
வளமென உணர்ந்தேன்
அறிவெனப் புகழ்ந்தேன்
வாழ்வாக்கி கழித்தேன்

மூச்சாக்கி சுவாசித்தேன்
பேச்சாக்கி பெருமையடைந்தேன்
சிந்தனைக்குள் சிக்கவைத்தேன்
படைப்புக்களாய் ஈன்றெடுத்தேன்
கலைஞனென பெயரெடுத்தேன்
தெரிந்தவனாய் காட்சியளித்தேன்
புலம்பெயர்விலும் தலைநிமிர்ந்தேன்

அமிழ்துக்குள் அமிழ்ந்தேன்
அனுபவித்தே எழுந்தேன்
கிள்ளியெடுக்கவே நுழைந்தேன்
அள்ளிக்கொடுத்திட மலைத்தேன்
உயிரெனவே உச்சரித்தேன்
உருக்கிவிட கரைந்தேன்
இறைவனாக்கி விசுவசித்தேன்

தந்தையாக்கி துதித்தேன்
அன்னையாக அரவணைத்தேன்
ஆசானாக மதித்தேன்
உறவாக்கி உபசரித்தேன்
ஊறிக்கொண்டே வருந்தேன்
இதுவிருக்க விருந்தேன்
வருத்தத்திற்கும் மருந்தேன்

கவலைகளை மறந்தேன்
வாய்விட்டே சிரித்தேன் சொத்தெனவே சேர்த்தேன்
சொந்தமாக சேர்ந்தேன்
சொர்க்கத்துக்குள் வசித்தேன்
சுகங்களுக்குள் கசிந்தேன்
மனத்தோடு அக்களித்தேன்

படைத்துப்படைத்து களித்தேன்
அறியாமையைக் கலைத்தேன்
புதுமைகண்டு மலைத்தேன்
புதியவைகளாய் பிரசவித்தேன்
நாவைக்கொள்ளைகொண்ட சுவைத்தேன்
நாளும்பொழுதுமாய் சுவைத்தேன் எல்லாமேயிதுவென முடிவெடுத்தேன்

ஜெயம்
01-08-2024

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading