முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல

ஜெயம் தங்கராஜா

கவி 724

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல

ஆண்டுகள் எத்தனைதான் உருண்டோடி நகரட்டும்
மாண்டவர் நினைவுகள் உள்ளம்விட்டு நீங்கிடுமா
எமக்காக போராடிய காவிய நாயகர்கள் ஒருபக்கம்
அவர்களோடு அருகிருந்து தீக்குளித்தோர் ஒருபக்கம்

வைகாசி பதினெட்டை தமிழினந்தான் மறந்திடுமா
வையகமே கைவிட்ட கொடுமையைத்தான் மன்னித்திடுமா
கடுமையாக போராடி வீழ்ந்திட்ட குலசாமிகளே
விடுதலை வீரருமை வரலாறும் சுமந்திடுமே

அப்பாவி மக்கள்மேல் பொழிந்ததே குண்டுமழை
ஒப்பற்ற உயிர்கள் சூறையாடப்பட்டதே துயரநிலை
அவயவங்களை இழந்து துடிதுடித்தோர் எண்ணிலடங்காது
அவைகளைக்கண்டு சித்தப்பிரமை பிடித்தோர் சொல்லிமாளாது

கதையை முடிக்கவென ஓநாய்கள் துடித்தன
அதை வழிநடத்தவென குள்ளநரிகளும் சேர்ந்துகொண்டன
பதைபதைத்து என்னசெய்வதென தெரியாது அங்கலாய்த்தவரை
சிதைத்தும் குதறியும் செய்ததே சித்திரவதை

எம்மினமே இந்நாளில் அஞ்சலிப்பை செய்திடுவோம்
நம் தலைமுறைக்கும் வலிகளை கடத்திடுவோம்
இது முடிவல்ல இனித்தான் ஆரம்பம்
அது குமிறியபடி வெளிவரவிருக்கும் பூகம்பம்

ஜெயம்
16-05 2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading