சக்தி சக்திதாசன்

பாவேந்தா ! பாரதிதாசா !
பாவுக்குள் தீ வைத்த மாகாகவி
பாரதியெனும் கனலின்
பா தீப்பொறியாய் எழுந்து
பாரிதனில் பாங்காய் நீயும்
பற்றி எரிந்தாய் பாக்கனலாய்

பாடிய கவிதைகளெல்லாம்
பாதை தவறிய சமூக அநீதிகளை
பா சாட்டை கொண்டே
பா தண்டனை அளித்தனவே

பாரினில் கண்ட மொழிகளில்
பாரது தமிழ் தானினிதென
பா கொண்டே பாவேந்தனே நீ
பாடிக் களித்தனையே !

பாவையர் அனைவரும் மூடரென
பாவியர் வகுத்திட்ட விதிகளை
பா பல கொண்டே நீ நொறுக்கினாய்
பாவலர் அனைவருமுனைப் போற்றி
பாரினில் ஏற்றிட புகழ் படைத்தனை

பாரதியெனுமோர் பா ஆசிரியனின்
பா மாணவரில் முதல்வனாய்
பாமுகம் எடுத்திட சுப்புரத்தினமாகிய நீ
பாரதியவனின் தாசனாகிய மகிமை
பாரினில் சாதிக் கொடுமையழிந்திட
பாமாலைகள் தொடுத்தொரு வேள்வி
பலமுனைப்புடன் நடத்திட்ட புலவனய்யா

பாவலர் நினைவுகள் தாங்கிப்
பாரில் பல வந்து போயினும்
பாரதிதாசனாம் உந்தன் நினைவினை
பரிசாய்த் தாங்கிட என்னுள்ளம்
பலவரம் பெற்றது என்றுணர்கிறேன்
பாவெந்தன் ஆசிவேண்டி யானுமொரு
பாமரன் கவிமாலை யாத்துந்தன்
பாதக்கமலங்களில் பணிகிறேன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading