ஒளவை

“வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்”
==============================
புலத்திய முனிவரின்
பெருமைமிகு பேரன்
இலங்கையை ஆண்ட
இணையில்லா வீரன்
சிவனின் இடத்தில்
தீவிர பக்தன்
தவத்தில் சிறந்து
தேவரையும் வென்றான்

சிரங்கள் பத்தில்
சிந்திக்கும் திறனான்
கரத்தை ஒடித்துக்
கானமும் இசைத்தான்
கயிலையைத் தூக்கிக்
காவிட முயன்றான்
பயின்ற கலைகளால்
பாரிலே உயர்ந்தான்

யோக சித்திகள்
யாவையும் அறிந்தான்
யாகங்கள் வளர்த்து
ஞாலத்தைக் காத்தான்
ஈசனிடம் வரங்கள்
இணையில்லாது பெற்றான்
மாசற்று இலங்கையை
மனதார ஆண்டான்

மருத்துவத் துறையில்
மகத்துவம் புரிந்தான்
அரும்பெரும் நூல்களை
அதற்கெனத் தந்தான்
நவக்கிரக நகர்வையும்
நிறுத்தி வைத்தான்
தவச்செருக்கு மிகுந்து
தலைக்கனமும் கொண்டான்

வேதங்கள் பயின்று
வேதியன் ஆனான்
சாதனை பலதால்
சரித்திரம் படைத்தான்
வேதனைச் செயலாக
வேற்றுமனை கவர்ந்தான்
பாதகன் என்ற
பழியுடன் மடிந்தான்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading