அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-272. தலைப்பு!

பள்ளிப் பருவம்
………….

கடந்த என்றன்
பள்ளிப் பருவம்
பதுங்குக் குழியிலே
பகைவன் குண்டு
மழையைப் பொழிந்தான்
எங்கள் தலையிலே!

மரமும் செடியும்
கொடியும் எங்கள்
பாட சாலையே!
மறக்க முடியா
பள்ளிப் பருவம்
சாவின் மடியிலே!

குபீர் குண்டுகள்
விழும் போது
படுப்போம் தரையிலே
பாடப் புத்தகம்
பட்டாம் பூச்சியாய்ப்
பறக்கும் வெளியிலே!

காக்கை குருவிகள்
கத்தும் ஓசை
காதின் வழியிலே
கதறி யடித்து
ஓடி ஒளிவோம்
வயலின் மறைவிலே!

போரின் சூழலில்
நாங்கள் கற்றதை
எவரும் மறுப்பாரா? – பகைவன்
போட்ட குண்டில்
செஞ்சோலைச் சிறுமிகள்
செத்து மடிந்தாரே!

அரைகுறை யாகப்
படிக்கும் நிலையில்
துயரில் உழன்றோமே
அன்னை தந்தை
உறவை இழந்தே
ஏதிலி யானோமே !

எங்களைப் போலப்
பள்ளிப் பருவம்
எவர்க்கும் வேண்டாமே! – எங்கள்
கனவில் கூட
அந்தப் பருவம்
வரவே வேண்டாமே!

நீரின் அலையில்
நீந்தி மறைந்து
நின்று நடுங்கினோம்
நெடுநாள் வரைக்கும்
அந்த நினைவை
எண்ணி வருந்தினோம்!

துள்ளித் திரியும்
பள்ளிப் பருவம்
என்றும் மறக்காதே!
தெள்ளத் தெளிவாய்க்
கல்வி கற்கும்
வாய்ப்பை இழக்காதே – உன்
வாழ்விலிது மீண்டும் வரும்
என்று நினைக்காதே!

மாதா பிதா
குரு தெய்வம்
வணங்க மறக்காதே!
பாட சாலை
செல்ல மறந்து
சுற்றித் திரியாதே – உன்
வாழ்வை உயர்த்தும் கல்வியை என்றும் இழக்காதே!

அபிராமி கவிதாசன்
02.07.2024

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading