சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 238
“மீண்டெழு”

வீழ்ந்து விடாதே !
காலம் சற்றே கடினமாய்
காற்று சற்றே வேகமாய்
சேற்று நிலங்களே பாதையாய்
கண்டிட்டாலும் தளர்ந்து நீயும்
வீழ்ந்திடாதே !

தாழ்ந்து விடாதே !
வெட்டி பேசும் வீணர்களும்
தட்டி வீழ்த்தும் நீசர்களும்
முட்டிப் பார்க்கும் மூர்க்கர்களும்
முன்னால் வந்து நின்ற போதிலும்
தாழ்ந்திடாதே !

தளர்ந்து விடாதே !
முயற்சி செய்து தோற்றாலும்
உழைத்தும் வாழ்வில் உயராமலும்
விரைந்தும் ஊர் போய்ச் சேராமலும்
பட்டும் அனுபவம் உதவாவிட்டாலும்
தளர்ந்திடாதே !

மலைத்து விடாதே !
எண்ணாத நேரம் வென்றிட்டாலும்
நினைக்காத ஒருஇவர் உதவிட்டாலும்
நம்பாத செயல்கள் நடந்திட்டாலும்
நாளை உன் வாழ்வு சிறந்திட்டாலும்
மலைத்திடாதே !

திகைத்து விடாதே !
எட்டாத உயரத்தில் மின்னும்
கிட்டாத வாழ்வினை எண்ணி
தட்டாத கதவுகள் திறந்திடினும்
ஈட்டாத வெற்றிகளை எண்ணி
திகைக்காதே !

தொலைத்து விடாதே !
கனிவான உள்ளத்தின் ஈரத்தை
துணிவான தோள்களின் வீரத்தை
பணிவான நெஞ்சத்தின் தன்மையை
பட்ட அனுபவங்களின் ஞானத்தை
தொலைக்காதே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading