நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெயம் தங்கராஜா
கவி 701
கல்லறை வீரரின் கனவிதுவோ
மொழியை உயிராக்கி இனத்தை உயர்வாக்கினாரே நில விசுவாசிகள்
தேசத்தைப் பற்றிய கனவு சாவுக்குப் பக்கத்தில் வாழ்க்கை
உண்ணாது உறங்காது சுமையைச் சுமந்து ஊரைக்காத்தார்கள்
சுவாசத்தின் வெப்பம் தணியவில்லை வீரத்தின் தீரம் தீரவில்லை
தம் கனவு ஒருநாளில் நிஜமாகுமென கொண்டு
நெஞ்சில் காவிய இலட்சியத்தோடு உறுதியோடு போராடி நன்று
கொடியவர்களை வேட்டையாடி தாயகத்தைக் காத்திடவே என்று
மேனியைத் துளைத்தாலும் குண்டு வீழ்ந்திடும் முன்பே கயவனைக் கொன்று
கலாசாரத்தை களங்கப்படுத்தி சீரழிக்கவைக்கும் இன்றைய நிகழ்வுகள்
பண்பாட்டைக் கட்டிக்காத்தவரை புண்படவைக்கும் தகாத பழக்கங்கள்
போதையில் தடுமாறும் புதிய தலைமுறையின் அழிவுப் பாதைகள்
கல்லறை வீரரின் கனவிதுவோ சற்றும் அறியாயோ எம்சனமே
விலைமதிப்பற்ற தங்கள் உயிர்களை மொழிக்காக காணிக்கையாக்கியதும் எதற்காக
எம் தேசம் எம் பாரம்பரியமென போட்ட கோசங்களும் எதற்காக
பிற மொழியும் பிறமதமும் உள்நுழையாது தாழ்ப்பாள் போட்டதும் எதற்காக
சீர்கேடுகளெல்லாம் நிகழுமென அன்றே உணர்ந்து களமாடினர் அடையாளத்திற்காக
ஜெயம்
22-11-2023
