புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 223
23/05/2023 செவ்வாய்
“முள்ளிவாய்க்கால்”
————————-
ஈரெழு வருடங்கள் கடந்தாச்சு!
இதுவரை என்ன நடந்தாச்சு!
பாரேதும் என்ன பகர்ந்தாச்சு!
பட்ட துன்பங்கள் மறந்தாச்சு!
குண்டு துளைக்காத இடமில்லை!
குதறிக் கிடக்காத உடலில்லை!
கண்டும் காணாத நாடில்லை!
கதறிக் கத்தாத தமிழரில்லை!
பச்சைக் குழந்தைக்கு பாலில்லை!
பாலர் தமக்கேதும் உணவில்லை!
அச்சம் ஒன்றேதான் குறைவில்லை!
ஆயிரமாய் கூடியும் பயனுமில்லை!
பறந்த ஏவுகணைக்கு கணகில்லை!
பாவிகள் செய்யாத செயலில்லை!
இறந்த எண்ணிக்கை தெரியவில்லை!
ஈனத் தனத்திற்கு எல்லையில்லை!
ஐநாவும் அங்கிருந்து பார்க்கவில்லை!
அயலவரும் தாம்வந்து உதவவில்லை!
எந்நாடும் எமக்காக என்றுமில்லை!
ஏனிந்த இழிவுநிலை மாறவில்லை!
முள்ளி வாய்க்கா லொரு முடிவில்லை-எனும்
முழக்கத் திற்கேதும் குறைவில்லை!
புள்ளி வைத்துக் கோலமிட ஆளுமில்லை!
“புழுகு”மட்டும் மூலதனம், வேறில்லை!
நன்றி
மதிமகன்
