நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.06.23
கவி இலக்கம்-107
பசுமை

அகலாத ஞாபகங்கள் ஆழமாய்
விரிய எமக்குள் ஆயிரமாயிரம்
பெருமூச்சில் துடிப்பு

பசுமை நினைவுகளின் வாசம்
சோர்ந்தவரை உசுப்பி எழுப்பும்
பூரிப்பு

துள்ளித் திரிந்த காலம்
பள்ளியில் செய்த குறும்பு

இலாச்சியில் பொரி விளாங்காய்
ஒளிச்சு வைத்து உண்ட சுவைப்பு

நாவற்பழம் தின்று வெள்ளைச்
சட்டையை கத்தரிப்பு நீலம்
கறையாக்கிய சிரிப்பு

தென்னை மரப் பொந்தில்
ஒளித்திருந்த கிளிகள்
பச்சை மிளகாய் கொத்தி
உண்ணும் துடிப்பு

அம்மே அம்மே எனக்
கத்தியபடி பிறந்த உடனே
தெத்தித் தெத்திப் பின்னால்
துரத்தும் ஆட்டுக் குட்டி நடிப்பு

கோழிக் குஞ்சுக்கு குங்குமச் சாயம்
பூசிக் கழுகுப் பார்வையில் இருந்து
தப்பிக்க வைத்த சோடிப்பு

பச்சைப் பசேலாய் மனக் கண்ணில்
அசைந்து நடனமாடும் நெல் வயலும்
தென்னஞ் சோலையும்

மறக்கவே முடியாத அன்றைய
பூரிப்பான பசுமை நினைவுகளே

Nada Mohan
Author: Nada Mohan