கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
நடிப்பு !
உள்ளத்தை மறைத்து
உலவிடும் பசப்பில்
வெள்ளமாய்ப் பெருகும்
வேடத்தின் முனைப்பு!
தள்ளியே வீழ்த்திடக்
காத்திருக்கும் துடிப்பு!
கச்சிதமாய் எங்கும்
தொடருதே நடிப்பு!

மேடையே காணா
மேதாவி இவராய்
மிளிருவார் நொடியில்
புதுப்புது உருவாய்!
போடுவார் கும்பிடு
புன்னகை தாங்கிச்
சொடுக்கிலே சொருகுவார்
முதுகிலே கத்தி!

நஞ்சினைத் தாங்கி
நகர்கின்ற நாகமாய்!
கொஞ்சிப் பேசிக்
குலத்தையே கருக்கும்
வஞ்சக நடிப்பினில்
வசப்படும் உலகிடை
அஞ்சியே நகருது
அனுதினம் ஆயுள்!

கீத்தா பரமானந்தன்
-24-06-24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading