கீத்தா பரமானந்தன்

ஆசான்!
அறிவெனும் ஒளியை ஏற்ற
அனுதினம் செதுக்கல் செய்தே
நெறியுடை பாதை தன்னை
நெஞ்சினில் பதியஞ் செய்தே
செறுவுடை மனித ராக்கிச்
செழிப்புடன் நிமிர்தி வைக்கும்
பொறுப்புடை ஆசான் தன்னைப்
போற்றியே வணங்கி நிற்போம்!

ஊரவர் பிள்ளை யெல்லாம்
உறவெனக் கூட்டி வைத்தே
ஆரமாய் மிளிர வைக்க
அனுதினம் கரைப்பர் தம்மை!
பாரமாய் எண்ணி டாமல்
பற்றுடன் பாடஞ் சொல்லித்
தாரணி தாங்கும் வண்ணம்
தங்கமாய் மின்னச் செய்வார்!

இருளெனும் மூடம் போக்கி
இலக்குடன் துலங்க வைக்கும்
மருவிலா மேலாம் ஆசான்
மதியதன் ஒளியா யென்றும்!
பெருமையா யெங்கும் உலவும்
பேறினைத் தந்த மேலாம்
குருவுடை ஆசி வேண்டிக்
குறைவிலா மேன்மை காண்போம்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading