சுனாமியின் வடுக்கள்

ரஜனி அன்ரன்

“ சுனாமியின் வடுக்கள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 26.12.2024

ஆழ்கடலின் அடியில் பூகம்பம்
அவனியே நடுக்கம்
ஆழிப்பேரலையாய் ஊழித் தாண்டவம்
அரக்கனாய் வீடுவரை சென்று
இரக்கமின்றியே உடலங்களை இழுத்துச் சென்று
ஆத்மாக்களை ஆழியில் கரைத்து
தீராப்பசி தீர்த்து ஏப்பம் விட்ட
துயரநாள் மார்கழித் திங்கள் இருபத்தியாறு !

அழித்துச் சென்ற தடங்கள்
அள்ளிச் சென்ற உடலங்கள் எத்தனை எத்தனை
அத்தனையும் ஆறாத் துயரங்கள்
வளம் சிறக்க வழிகோலி
இனம் சிறக்க படகேற்றி
தினம் தினம் மடியிலே சுமந்த கடலம்மா
சினம் கொண்டு அள்ளிச் சென்றாயோ
மார்கழித் திங்கள் இருபத்தியாறினிலே !

இறந்த உயிர்களுக்கு
இரங்கலைத் தவிர வேறெதுவுமில்லை
இதுபோல அனர்த்தங்கள்
இனிமேலும் வேண்டாமே
இருபது வருடங்கள் கடந்த போதும்
இன்றும் வழிகிறதே எம் விழியோரம்
புதிய கனவுகள் பூக்கட்டும் புத்துணர்வும் பிறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan