ஜெயம் தங்கராஜா

கவி 710

செல்லமே என் செல்வமே

சிந்திடும் புன்னகையால் உள்ளம் பூரிக்குமே
உதிர்க்கின்ற சொல்லாலே செவிகளில் அமுதூறுமே
கடைச்சிரிப்பால் உடலுள்ளே உயிரும் சிலிர்த்திடுமே
தடைப்பட்ட சந்தோசத்தை மழலைமொழி பொழிந்திடுமே

செல்லமே செல்வமே அள்ளிக்கொள்ள வாராயோ
உள்ளத்தில் உவகையை மொத்தமாய்த் தாராயோ
சித்திரமும் உயிர்பெற்று அழகாக அசைவதென்ன
நித்திரையில் கனாக்களிலும் குறும்புகளைப் புரிவதென்ன

கன்னக்குழி அழகினை விபரித்திட வார்த்தையில்லை
உன் செயலோ விழிகளிற்கு சொர்கவெல்லை
தூங்குகின்ற அழகைப்பார்க்க கோடிக்கண்கள் வேண்டுமன்றோ
ஏக்கங்களும் கவலைகளும் மனதைவிட்டு நீங்குமன்றோ

சொர்க்கத்தின் உச்சமதை உணர்வும் அடைவதென்ன
பக்கத்தில் நீயிருந்தால் பசிக்க மறுப்பதென்ன
குழந்தையாய் அருகிரிந்து குதூகலிக்க வைக்கின்றாய்
புலர்ந்திடும் பொழுதுகளில் நினைவுகளை மொய்க்கின்றாய்

விம்மிவிம்மி அழும்போதும் அதுவுங்கூட அழகு
அம்மாவின் அரவனைப்பால் ஒளிர்ந்துவிடும் நிலவு
மண்ணிலே உதித்திட்ட புதியதொரு விண்மீனே
ஜென்மமிது நிறையுமட்டும் என்னுலகம் நீதானே

ஜெயம்
08-02-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading