தாயுமானவர்
Jeya Nadesan
நாதன் கந்தையா
மூண்ட தீ.
கொள்கை அற்ற கோனின்
போலி பேச்சை நம்பி
அடிமைப்பட்டு
மந்தைகளாக கிடந்த மக்கள்.
ஏமாற்றப்பட்டது
தாமதமாக புரிந்தபோது.
நீண்ட மோனம் கலைந்து
உணர்வுப் பிழம்புடன்
ஒரு உச்சிப்பொழுதில்
மன்னனை
எதிர்க்க தயாராகிவிட்டனர்.
மக்கள் சக்தியின் மகோன்னதம்
அறியாத மன்னன்
நுண்ணறிவு விடுப்பெடுக்க
காலாட் படைகளை ஏவிவிட்டு
உப்பரிகையில் உல்லாசமாக
களிப்படைந்தான்.
மக்களின் குமுறல்
காலை நேரத்து
சூரியகதிர்களாக
ஒரு உச்சிப்பொழுதில்
ஏகாந்தம் உடைப்பெடுத்து
அரச படைகளை
ஊடுருவி துளைத்தபோது
“மூண்ட தீ”
ஆட்சி மண்டலத்தின்
அடி வேரில் வெப்பம் கனன்றது.
சட்டென்று தோன்றிய
மக்கள் சக்தியின்
கதிரியக்க வெப்பத்தால்
மோன புழுக்கம் உடைந்து
மன்னனின் உடல் முழுவதும்
அமிலம் சுரந்தது.
மக்கள் சக்தியின் மகோன்னதம்
வெள்ளமெனப் பெருகி
வேதியல் மாற்றமும்
வினை மாற்றமும்
ஆழிப்பேரலை போல
ஆற்பரித்து எழுந்து
விஞ்ஞானிக்கும் எட்டாத
தத்துவத்துடன்
பற்றி படர்ந்து “மூண்ட தீ”
அரசனின் மண்டைக்குள்
ரசாயன மாற்றமாகி
குற்றுயிரில் கிடந்த
கொடிய வைரஸ்ஸுக்கள்
சட்டென வெடித்து
செட்டை முளைத்து
சிறகடித்து பறந்தன.
வைரஸுக்கள் உருமாறி
வளி மண்டலத்தில்
வெப்பம் அதிகரித்தபோது
அகால வேளையில்
பெய்த அமில மழை
ஊமை வெய்யில்
ஒன்றுசேர
மன்னனின் தோல் மரத்துப்போய்
மாயை அம்மணமானபோது.
முன்பு பறந்தவை எல்லாம்
பட்டாம் பூச்சிகள் அல்ல
செட்டை முளைத்த
தேள்கள் என்ற
உண்மை மக்களுக்கு தெரிந்தது.
அன்பு மனித நேயம்
அதன் உள்ளார்ந்த வலிமை
ஆறாவது அறிவின்
அடிப்படை கூறுகளால்
பகுத்துணர்ந்து பார்க்காமல்
பரிகாரமாக
நேர்த்திக்கடனை தீர்க்க.
வளர்த்த ஆட்டை
கோவிலில் பலி கொடுத்து
தலையை தெருவில் வீசியபோது.
மாமிசம் தின்ன வந்த
காகங்களும் நரியும் நட்பாகி
வேதியல் மாற்றத்தின் வெப்பம்
பெரு விபத்தாகி
வானத்தில் கருக்கட்டி
அமில மழை பெய்தது.
காகம் நரி
அமில மழையில்
நனைந்தபோதும் அவை
மருணிக்கவில்லை
ரோஜா செடியும்
வில்வ மரமும்
பட்டுப்போய் விட்டன.
-நாதன் கந்தையா-
