வலியதோ முதுமை

கவி 717

வலியதோ முதுமை

இளமை விடைபெற முதுமை குடியேற
முறுக்கேறிய தேகம் சுருங்கியே உறுதிகுலைய
துள்ளிய கால்களும் மெல்லவே அசையும்
சிறுமை சீண்டிவிடும் முதுமை கொடுமையே

சொந்தம் சுற்றியிருந்தும் நொந்த வாழ்வு
நேசமும் பாசமும் உடம்பில் தெம்பிருக்கும்போதே
அவரவர்களுக்கு அவரவர் வேலை முக்கியம்
கையாலாகாத அவலம் முதுமையின் சாபக்கேடே

உயிர் மீதான ஆசை யாருக்குத்தானில்லை
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவரும் மரணம்
முதுமையில் துணையில்லாமல் தனிமை தண்டனையே
புதிது புதிதாய் முளைத்துவிடும் வலியதுவே

இனிமையை அழித்தே முதுமை விளையுமே
விடை கொடுத்திடும் பருவம் அடையுமே
மருந்தே உணவாக உணவே வெறுப்பாகுமே
கம்பீரம் உருக்குலைய கைத்தடி துணையாகுமே

காலனுக்காக காத்திருக்கும் முதுமையெனும் நிலைமை
முடக்கிப்போட்டே அறைக்குள் சிறைப்படுத்தும் தனிமை
சுருங்கும் உலகுக்குள் உணர்வுகள் ஒடுக்கப்படும்
பிரயோசனமற்ற பொருளாகும் முதுமை சாபமே

ஜெயம்
28-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading