கீத்தா பரமானந்தன்

பிள்ளைக்கனி அமுது!

காதலில் விளைந்த முத்தே
கனவெல்லாம் உயிர்ப்பான சொத்தே!
மாதவப் பேறாய் மடிதவழ்ந்தாய்
மகவாகி வம்சம் தளைக்கவைதாய்!

தாய்மை தந்த வரமே
தளிரே கண்ணின் மணியே!
சேயாகி வந்த திருவே
சிந்தும் தேன் துளியே!
வாயாரப் பாடுகிறேன் தாலாட்டே
வம்சத்தின் குலவிளக்கே!

பிள்ளைக்கனி அமுதே
பெற்றெடுத்த பொற்சித்திரமே!
துள்ளி வருகையிலே
துன்பமெல்லாம் ஓடுமடா!
வெள்ளி மணிச்சிரிப்பில்
வீடெல்லாம் நிறையுமடா!
உள்ளத்தின் உவப்பே
உயரங்கள் தொட்டிடடா!

கீத்தா பரமானந்தன்
11-02-24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading