விடியாத இரவொன்று

பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி
நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும்
அகத்தினில் அனலாய் அரும்பட்டும் துணிவு
சுகத்தினை எதிர்பார்த்து சூனியமாக்காதே வாழ்வை
நிலவொன்று தெரியும் நிம்மதி கிடைக்கும்
அலகுகள் கொண்டே அடுக்குகின்றன பறவைகள்
குச்சி குச்சியாய்க் குட்டிச் சேகரிப்பு
உச்சாணிக் கொப்பினில் உல்லாசம் காண்கின்றன
நல்ல பாடம் நமக்கும் சொல்லுதே
வல்லமை கொண்டால் வசந்தமும் வீசும்
முயன்றேதான் பார்த்துவிடு முடியும் உன்னால்
அயற்சி வேண்டாம் அரும்பாடு பட்டால்
அடிமேல் அடிஅடித்து அம்மியை நகர்த்தலாம்
விடியும் ஒருநாள் விரட்டுவாய் இருளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு பாராட்டுகள்.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் வாழ்த்துகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan